பூர்வமீமாம்சம்

இந்து மதங்களிலோ அல்லது இந்தியாவில் தோன்றிய மதங்களுக்கோ மூல நூல் என்று எதுவும் இல்லை. அவை பல நூல்களை கொண்டவை மற்றும் இதுதான் மூல நூல் என்று எதுவும் கிடையாது. ஆனால் ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவமும் இஸ்லாமும் அதன் மையநூலக பைபிள் மற்றும் குரானை வைத்து வளர்ந்தவை. இப்படி மையநூலை வைத்து இயங்குவது செமிட்டிக் மதங்களின் இயல்பாகும். அப்படி வேதங்களை மூலநூல்களாக கொண்டு வளர்ந்தவை பூர்வமாம்சமாகும். இந்தியா தத்துவ மரபில் மையநூல்வாதம் கொண்டு இயங்கும் ஒரே தத்துவ தரிசனமும் பூர்வமீமாம்சம் மட்டுமே. 

பூர்வமீமாம்சம் என்பது வேதங்களை அடிப்படையாக கொண்டு வேள்விகளை சடங்குகளையும் நடத்துவதாகும். வேள்வி மற்றும் சடங்குகளை செய்வதே இதன் முதன்மையான கர்மமாகும். இந்த தரிசனம் சடங்கு செயல்பாடுகளையும் அவற்றின் விளைவுகள் பற்றியே விவரிக்கிறது(செயல் - விளைவு). இது புரோகித மரபு என்றும் அழைக்கப்படுகிறது. பூர்வமீமாம்சத்தை தொகுத்தவர் ஜைமினி என்று குரு ஆவர் மற்றும் இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டகாலமாக  இருக்கலாம்.

பூர்வமீமாம்சம் தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்ற நான்கு அடிப்படைகளை கொண்டது. இதில் தர்மம் என்பது அறம் அல்லது நீதி நெறிகள் அல்ல. மாறாக எந்தந்த அடிப்படைகளின்படி நமது செயல்களை ஆற்றுகிறோமோ அதுவே தர்மம் எனப்படுகிறது. இத்தத்துவதில் கர்மம் என்பது சடங்குகள் செய்வதே ஆகும். அந்த கர்மத்தின் விளைவே காமமும்  மோச்சமுமாகும்.

பூர்வமீமாசத்தில் கடவுளுக்கு முக்கிய இடமில்லை மற்றும் சடங்குகளே முக்கியமானவை. பிரபஞ்சத்தின் மூல காரணம் யார் என்று கேள்வி எழும்போது இறைவன் என்ற கருத்து தேவைப்படுகிறது மற்றும் இவை படிப்படியாக பிற்காலத்தில் உருவாகி வந்தவையாகும். 

வேதகாலத்தில் இருவகையான கடவுள் வடிவங்கள் இருந்து வந்தன. ஒன்று செயல் வடிவ கடவுள்கள். அவை ஒவ்வொரு செயலுக்கு உரிய தனி தெய்வங்கள்(ராத்ரிதேவி, உஷை, சாவித்ரி) ஆகும். இரண்டாம் வகை தெய்வங்கள் இந்திரன், வருணன் மற்றும் அக்னீ போன்ற இயற்கையை உவமையாக கொண்ட தெய்வங்கள் ஆகும். ஆனால் இவை முழுமுதல் தெய்வங்களல்ல. முழுமுதற் கடவுள் என்று வரும்போது இப்பிரபஞ்ச விதிகளுக்கு மூலக்காரணமாக உள்ள பிரம்மமே என உருவகிக்கப்படுகிறது.

பூர்வமீமாசத்தின்படி இப்பிரபஞ்சம் இறைவனால் உருவாக்கப்பட்டது அல்ல. அது அதற்குரிய செயல்விதிகளின்படி தானாக உருவாகியது. பௌதிக  பொருட்களால் நிறைந்த பிரபஞ்சத்தில் அவற்றுடன் கடவுளும் குடிகொண்டுள்ளது. இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் செயல் - விளைவு என்ற விதிகளுக்கு உட்பட்டவை மற்றும் அவை கடவுளுக்கும் பொருந்தும்.

வேள்வி சடங்குகளே இதன் முதன்மையான கர்ம நோக்கமாகும் மற்றும் இந்த சடங்குகள் கடவுளின் கருணையையோ அல்லது அருளையோ பெற அல்ல. கடவுள்களே வேத மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவையாகும். இந்த கர்ம சித்தாந்தம் இந்தந்த சடங்குகளுக்கு இந்தந்த விளைவுகள் என்று விளக்குகின்றன. இந்த கர்ம விளைவுகளின்படியே விதி, மறுபிறப்பு போன்றவை நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆன்மிகம், யோகம் மற்றும் தியானம் போன்றவற்றிக்கு எதிரானது இத்தத்துவம். ஆனால் பிற்காலத்தில் இவை அனைத்தையும் தனது வைதிக மரபுடன் உள்ளிழுத்து கொண்டது பூர்வமீமாம்சம்.

இன்று இந்தியா முழுவதும் காணப்படும் கணபதி ஹோமம் போன்ற சடங்குகள் இந்த பூர்வமீமாம்சத்தின் வைதிக மரபேயாகும். இந்த வேள்வி மரபானது பிற்காலத்தில் மெல்லமெல்ல ஆலய மரபுடன் தன்னை இணைத்து கொண்டது. இன்று இந்து மதத்தில் காணப்படும் அனைத்து வழிபாட்டு கூறுகளையும் தன்னகத்தே உள்ளிழுத்து கொண்டு வளர்ந்து நிற்கிறது பூர்வமீமாம்சம்..

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்