இந்து ஞான மரபின் நான்கு யோக நிலைகள்
இந்து ஞான மரபில் ஒருவர் தனது மனதை தெய்வத்தின்பால் நிலைநிறுத்தி இறைவனிடம் ஐக்கியமாவது அல்லது ஜீவாத்மா தன்னை பரமாத்மாவுடன் இணைத்து கொள்ளவது யோகம் எனப்படுகிறது. இதை இந்து மரபில் பக்தி, கர்ம, யோக மற்றும் ஞான என நான்கு வழிகளில் இறைவனையோ அல்லது பரமாத்மாவையோ அடையாளம் என்கிறது.
இந்து ஞான மரபு இப்படித்தான் பரமாத்மாவை(இறைவனை) அடைய முடியும் என்று எங்கும் வரையறுக்கவில்லை. ஒருவருக்கு பக்தி, சடங்கு அல்லது சம்பிரதாயங்களில் உடன்பாடு இல்லை என்றால் யோகம்(இராஜ) அல்லது ஞான வழியை தேர்ந்தெடுக்கலாம் என்கிறது பரமாத்மாவை அடைய.
பக்தி யோகம்
பக்தி யோகம் என்பது பக்தி மற்றும் அன்பின் மூலம் இறைவனிடம் ஒன்றிணைவதாகும். அதாவுது ஜீவாத்மா தன்னை பக்தியின் மூலம் பரமாத்மாவோடு இணைத்து கொள்வதாகும். ராமானுஜர் பிரம்மத்தை(பரமாத்மாவை) அடைவதற்கு பக்தி மார்க்கத்தையே முதன்மையாக முன்வைத்தார்.
கர்ம யோகம்
கர்ம யோகம் என்பது செயல்களை முதன்மையாக கொண்டது. அதேபோல் கர்ம யோகம் வேதத்தை அடிப்படையாக கொண்டு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை முதன்மையாக முன்னிறுத்துபவை.
உதாரணத்துக்கு பூர்வமீமாம்சம் என்னும் தரிசனம் வேதத்தை மூல நூலக ஏற்றுக்கொண்டு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை முதன்மையாக வலியுறுத்துகின்ற கர்ம தரிசனமாகும்.
ஜீவாத்மா தனது செயல்களின் மூலம் தன்னை பரமாத்மாவுடன் இணைத்துக்கொள்வதே கர்ம யோகமாகும். விவேகானந்தர் மற்றும் காந்தி போன்றோர் செயல்களையே முதன்மையாக முன்வைத்து செயல்பட்ட கர்ம யோகிகளாவார்கள்.
இராஜ யோகம்
ஐம்புலன்களையும் மனதையும் அடக்கி ஒருவன் தனது தூய நிலையில் பிரபஞ்சத்தை அறிய முற்படுவது யோக முறையாகும். யோகத்தின் எட்டு படிநிலைகளை முறையே
யமம் (அடக்கம்), நியமம் (கட்டுப்பாடு), ஆசனம் (யோக முறையில் உட்காருதல்), பிராணாயாமம் (மூச்சைக் கட்டுப்படுத்தல்), பிரத்தியாகாரம் (புலனறிவை மறக்கடித்தல்), தாரணை (கவன ஈர்ப்பு), தியானம் (தியானம்), சமாதி (சமாதி).
ஆகும். இந்த யோகா முறையை தொகுத்தவர் பதஞ்சலி ரிஷியாகும். ஜீவாத்மா யோக முறைகளின் மூலம் பிரபஞ்சம் அல்லது பரமாத்மாவுடன்(பிரம்மத்துடன்) தன்னை இணைத்து கொள்ளவது இராஜ யோகமாகும். யோக முறையை முதன்மையாக முன்வைத்தவர் ரமண மகரிஷி ஆகும்.
ஞான யோகம்
தூய அறிவின் மூலம் பிரபஞ்சம் அல்லது பரமாத்மாவை அறிய முயல்வதாகும். நமது வேதாந்தத்தின் பெரும் பகுதி ஞான தேடலையே முன்வைப்பவையாகும்.
ஜீவாத்மா தூய அறிவு தேடலின் மூலம் தன்னை பரமாத்மாவுடன் இணைத்து கொள்வதே ஞான யோகமாகும். ஆதி சங்கரர் மற்றும் நாராயண குரு போன்றோர் பரமாத்மாவை(பிரம்மத்தை) அறிய தூய ஞான தேடலை முன்வைத்த வேதாந்திகளாவர்கள்.
பகவத்கீதை இந்த நான்கு யோக முறைகளையும் சம அளவில் போதிக்கின்ற தத்துவ நூலாகும்.
Comments
Post a Comment