இந்து ஞான மரபு

இந்து ஞான மரபு என்பது வெறும் சடங்குகள் சம்பிரதாயங்கள் மற்றும் இறை வழிபாட்டை மட்டும் கொண்டதல்ல மாறாக அவை பல தத்துவங்களையும் தரிசனங்களை சிந்தனைகளையும் நீதி நூல்களையும் தன்னகத்தே விவாதித்து உருவானவை. உலகில் வளர்ந்து வந்த நாகரிகங்கள் அனைத்தையும் பகுத்துபார்ப்பதற்கான ஒரு பொதுவான அணுகுமுறை உள்ளது. அந்த முறையில் இந்து ஞான மரபை அணுகினால் எளிதாக புரிந்து கொள்ளலாம் 
அதன் அடிப்படைகளை.

எந்த ஒரு சமூகத்தின் தொல் பிரதி தொடக்கம் என்பது நாட்டார் பண்பாடாகத்தான் இருக்கும் அதில் இருந்துதான் இலக்கியம் மற்றும் கவிதைத்தன்மை கொண்ட செவ்வியல் இலக்கியங்கள் உருவாகும். அடுத்த படிநிலையில் செவ்வியல் இலக்கியங்கள் மூலம் உருவான கருத்துக்கள் தர்க்கரீதியான விவாததிற்கு உட்பட்டு அவை தத்துவமாக தொகுக்கப்படும். இதன் அடுத்தபடிநிலையில் அந்த தத்துவம் பிற அறிவு துறைகளில் விரிவடைந்து தரிசனமாகிறது. அந்த தரிசனங்கள் உள்ளுணர்வால் விரிவடைந்து ஒரு கட்டத்தில் பெரு மதங்களாகிறது. இதன் முறையே,

நாட்டார் பண்பாடு -> செவ்வியல் இலக்கியங்கள் -> தத்துவங்கள் -> தரிசனங்கள் -> மதங்கள்

இதே முறையிலே தான் பழமைவாய்ந்த  இந்திய, கிரேக்க மற்றும் சீனா நாகரிகங்கள் வளர்ந்து வந்துள்ளது. இந்த முறையில் இந்து ஞான மரபை வகுத்துக்கொண்டாள் எளிதாக புரிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் இந்து ஞான மரபை பின்வருமாறு வகுத்துக்கொள்ளலாம்,

இந்து ஞான மரபு

1. வேதங்கள் (நாட்டார் பண்பாடு + செவ்வியல் இலக்கியங்கம்)

2. மூன்று தத்துவங்கள்
(பிரஸ்தான திரயம்) - கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம்.

3. ஆறு தரிசனங்கள் - சாங்கியம், யோகம், நியாயம், வைஷேடிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம்.

4. ஆறு மதங்கள் - சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம்

மற்றும் இவற்றை தழுவி உருவான சாஸ்திரங்கள், புராண நீதிநூல்கள், சித்தாந்தம், வேதாந்தம், ஆகமங்கள், திருமறைகள் ஆகிய அனைத்துமே இந்து மரபின் சாரமாகும்.

இந்து ஞான மரபின் தொடக்கம் என்றால் அது வேதங்களே(குறிப்பாக ரிக் வேதமே) மற்றும் அவை பல இனக்குழுக்களின் சடங்குளையும் நம்பிக்கைகளையயும் கொண்டவையாகும். அவை நாட்டார் பண்பாட்டை கொண்ட இயற்கையை நோக்கிய எளிய பிரார்த்தனை பாடல்களையும் மற்றும் கவிதை தன்மை உடைய செவ்விய இலக்கியங்களை உடையவையாகும். அச்சமூகம் இயற்கையை இறையாக உருவகம் செய்து இந்திரன், வருணன் மற்றும் அக்னீ போன்ற சிறு தெய்வங்களை வழிபட்டனர். அதே சமயம் அவர்கள் இப்பிரஞ்சத்தில் நடப்பவற்றை எல்லாம் வியந்து கவிதைகளாக பாடினார். ஒரு கட்டத்தில் அந்த பிரபஞ்ச வியப்பு சக்தியை பிரம்மம் என்று ஒலித்தனர். அதிலிருந்து பிரபஞ்ச ரகசியத்தை அறியும் பிரம்மத்தை நோக்கி நகர ஆரம்பித்தன. இதுவே வேதம் மற்றும் இந்து ஞான மரபின் உச்சம் எனப்படுகிறது. இதிலிருந்தே இந்து ஞான மரபின் அனைத்து தத்துவங்களும் பிரபஞ்சத்தை பற்றி அறியும் பிரம்மத்தை நோக்கி உருவாக ஆரம்பித்தது.

வேதங்களின் ஞான தரப்புகளை கர்ம காண்டம் ஞான காண்டம் என்று இருதரப்புகளாக பிரிக்கலாம். அதில் கர்ம காண்டம் என்பது சடங்குகள், வேள்விகள் மற்றும் ஆச்சாரங்களை முன்னிறுத்துபவை. ஞான காண்டம் என்பது தூய அறிவு தேடலை முன்வைப்பது. இந்த ஞான தேடலின் தொடர்ச்சியே உபநிஷங்கள், பிரம்ம சூத்திரம், வேதாந்தம் மற்றும் ஆறு தரிசனங்களாகும்.

"பிரபஞ்சத்தின் சாரம்", "பிரம்மத்தில் இருந்தது உருவானது பிரபஞ்சம்", "பிரபஞ்ச தோற்றத்திற்கு மூல காரணமே பிரம்மம்", "பிரபஞ்சமே பிரம்மம்", "நானே பிரம்மம்", "நீயே பிரம்மம்" என்று பல தன்மைகளில் பிரம்மத்தை மையமாக வைத்து விவாதிக்க ஆரம்பித்தன ஞான தத்துவங்கள். இந்த பிரம்ம(பிரபஞ்ச) தேடலே இந்து ஞானத்தின் மைய தேடல் என்று வைத்து கொள்ளலாம். இதன் சாரம் என்னவென்றால் இப்பிரபஞ்ச தோற்றத்தை எப்படி வகுத்து கொள்ளவது என்பதேயாகும்.

உபநிஷங்கள் பிரம்மத்தை தத்துவர்த்தரீதியில் விரிவாக விவாதித்து அதை அடைவதற்கான வழிகளை முன்வைத்தன. உபநிஷங்கள் பிரம்மத்தை பற்றி அறிய ஞான தேடலையே முன்வைக்கின்றது அதேசமயம் அவை வேதங்களின் கர்ம காண்டத்தை பெருமளவு எதிர்க்கின்றன. இதற்கடுத்து பிரம்ம சூத்திரமும் அதன் தொடர்ச்சியான பிற்கால வேதாந்தகளும் பிரம்மத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றன. குரு பாதராயணர் பிரம்ம சூத்திரத்தில் பிரம்மத்தில் இருந்துதான் பிரபஞ்சம் தோன்றியது என்கிறார். ஆனால் பின்னால் வந்த ஆதி சங்கரர் ஒருபடி மேல் சென்று பிரபஞ்சமே பிரம்மம் என்கிறார் தனது அத்வைத கோட்ப்பாட்டில். சங்கரரின் அத்வைதத்திற்கு அடுத்து விசிஷ்டாத்வைதம் மற்றும் துவைதம் போன்ற பிரம்ம தத்துவங்கள் உருவாகின. இதில் சங்கரரின் அத்வைதமே அறிவு தளத்தில் சிறந்து விளங்குகின்றது.

தத்துவங்களுக்கு அடுத்து தரிசனங்கள் பிரபஞ்ச தோற்றத்தை தர்க்கரீதியில் வேதங்களுடன் விவாதிக்கின்றனா. குறிப்பாக சாங்கியம், யோகம், வைசேஷிகம் மற்றும் நியாயம் போன்ற பௌதிக தரிசனங்கள் பிரபஞ்சம் பருப்பொருட்கள் மற்றும் அணுக்களால் ஆனது என முன்வைக்கின்றன. தரிசனங்களில் பூர்வமீமாம்சத்தை தவிர அனைத்து தரிசனங்களும் ஞான தேடலையே முன்வைக்கின்றன.

தத்துவங்களும், தரிசனங்களும்  
உள்ளுணர்வால்  விரிவடைந்து இறை வழிபாடாக மாறும்போது அவை மதங்களா உருவாகுகின்றன. அப்படி இந்து ஞான மரபில் உதித்தவை சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணபத்யம், சௌரம் ஆகியவையாகும். 

உதாரணத்துக்கு வைசேஷிக தரிசனம் அணுக்களின் சேர்க்கை அல்லது இணைவுகளின் மூலமே இப்பிரபஞ்சம் தோன்றியது என்கிறது. இப்போது அணு சேர்க்கை நடைபெற காரணம் என்ன? அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? என்று கேள்விகள் எழும்போது. அதை வைசேஷிகம் கண்ணனுக்கு தெரியாத உந்து சக்தி என்கிறது. அந்த பிரபஞ்ச உந்து சக்தியை பெண் தெய்வமாக பாவித்து வழிபடுவது சாக்தேயம் ஆகும். அதேபோல் அந்த சக்தியை பிள்ளையார் வடிவமாக பார்ப்பது காணபத்யம் ஆகும். இவ்வாறே தரிசனங்கள் உள்ளுணர்வால் விரிவடைந்து வழிபாட்டு மாதங்களாக உருவாகுகின்றன. ஞான மரபில் உள்ள  ஒவ்வொரு சமயத்தை அதன் வழிபாட்டை நீக்கிவிட்டால் அதன் சித்தாந்தம் வெளிபடும் மற்றும் அது மையமாக குறிப்பது பிரம்மம் அல்லது பிரபஞ்ச சக்தியையே.

இந்து சிந்தனை மரபில் மூல நூல்களை சுருதி, ஸ்மிருதி என இரண்டு வகையாக பிரிப்பதுண்டு. பிரபஞ்ச தரிசனங்களை முன்வைக்கும் நூல்கள் சுருதிகளாகும். வாழ்க்கை நெறிகளையும் சமூக சட்டங்களையும் வகுப்பவை ஸ்மிருதிகள் என்று பிரிக்கப்படுகிறது.

சுருதி மூல நூல்கள்
வேதங்கள்
உபநிஷங்கள்
பிரம்ம சூத்திரம்
ஆறு தரிசனங்கள் 

ஸ்மிருதி மூல நூல்கள் 
ஸ்ம்ருதி(மனு, யம, யாக்ஞவல்கிய போன்ற ஸ்மிருதிகள்)
நீதி நூல்கள்(விதுர நீதி, சாணக்கிய நீதி)
புராண நீதி நூல்கள்
சாஸ்திரங்கள்(அர்த்தசாஸ்திராம்)

ஒரு சமூகம் தன்னைத் தொகுத்துக்கொள்ளவும் திறம்பட செயல்படவும் தனக்கு தானே உருவாக்கி கொண்ட நெறிமுறைகளும் நம்பிக்கைகளும்தான் நீதி நூல்கள் மற்றும் ஸ்மிருதிகளாகும். ஸ்மிருதி நூல்கள் என்பவை சமூக சூழல் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறு படுபவை. இன்றைய காலகட்டத்தில் ஸ்மிருதி என்பது நமது அரசியல் அமைப்பு சட்டமே. மனு ஸ்மிருதிக்கு முன்பும் பின்பும் ஏகப்பட்ட ஸ்மிருதிகள் இருந்துள்ளன. 

வேதங்கள், தத்துவங்கள் எல்லாம் சமூகத்தில் உயர் அறிவுத்தளங்களில் இயங்குபவை. இந்த தத்துவங்களை எல்லாம் மக்களிடம் எளிய முறையில் கொண்டு சேர்ப்பதற்கு உருவாக்கப்பட்டவை புராணங்கள். அவை நீதி அல்லது தர்மம் சார்ந்தவற்றை பேசுபவையாகவும் அதன் பின்புலத்தில் தத்துவமும் இருக்கும். ஆனால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதன் தத்துவ சாராம்சம் இல்லாமல் புராணங்கள் மட்டும் கடத்தப்படுவதால் அது வெறும் கதைகளாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்